பிரித்தானிய பாராளுமன்றின் உள்ளரங்கத்தில் தமிழ் மரபுத் திங்கள் – தை பொங்கல் நிகழ்வு
தை மரபுத் திங்கள் மற்றும் தை பொங்கல் விழாவினை கடந்த பல வருடங்களை போன்று மிகவும் சிறப்பான முறையில் 17 ஜனவரி 2023 அன்று பிரித்தானிய பாராளுமன்றின் உள்ளரங்கத்தில் (Jubilee Hall) பிரித்தானிய தமிழர் பேரவையினால் நிகழ்த்தப்பட்டது.
உலகளாவியரீதியிலும் குறிப்பாக பிரித்தானியாவிற்கும் தமிழ் மக்களின் சிறப்பான பங்களிப்புகளை பாராட்டி சிறிலங்காவில் இன அழிப்பிற்கு ஆளாகி வரும் தமிழ் மக்களை சர்வதேசம் தலையிட்டு பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து குரல் கொடுத்தனர்.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதுடன் பிரித்தானிய தமிழர் பேரவை 2011இல் ஹரோ மாநகர அவையுடன் (Harrow Council) இணைந்து தை பொங்கல் விழாவை நடத்தி ஒரு விதையை விதைத்து தொடர்ச்சியாக அதனை வருடா வருடம் வளர்த்து மக்கள்மயப்படுத்தியதன் விளைவு பிரித்தானியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் “தமிழ் மரபு திங்கள்” மற்றும் “தை பொங்கல்” எனும் கருப்பொருளில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதனை நினைவுபடுத்தினார்கள்.
பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட “கடல்சார் பயணம் மற்றும் உலகமயமாக்கலின் முன்னோடியான தமிழ் பாரம்பரியம்” (Tamil Heritage Pioneered Maritime Expedition & Globalisation) என்ற ஒரு காணொளி வெளியிட்டு வைக்கப்பட்டது. இக் காணொளி தமிழ் மக்களின் பிரமாண்டமான ஆக்கத் திறனையும் திரை கடலோடி திரவியம் தேடுதல், உலகமயமாக்கம் மற்றும் படைநகர்த்தலில் தரைவழி பாதை இன்றி ஆயிரக்கணக்கான கடல் மைல்கள் ஆழ்ந்த சமுத்திரத்தினூடு நெடு நாட்கள் பயணித்து தொலை தூர நாடுகளை வசப்படுத்தும் பிரமிக்கத் தக்க ஆற்றலை தமிழர் படை 1000 வருடங்களின் முன்னே முன்னோடியாக சாதித்தமையை சரித்திரப்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் விளக்குகின்றது. இது நடந்து ஏறத்தாழ 500 வருடங்களின் பின்னரே ஐரோப்பாவிலுள்ள நாடுகள் நீண்ட தூர கடற்படை கட்டமைப்புகளை உருவாக்கி தத்தம் சாம்ராஜ்யங்களை நிர்மாணிக்கத் தலைப்பட்டன.
கலந்து கொண்ட அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் (All Party Parliamentary Group for Tamils – APPG T) அனைவருமே தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் தாம் உறுதுணையாக நிற்பதனை மீண்டும் வலியுறுத்தினார்கள்.
அவர்களது உரையில், பின்வரும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.:
- சுகாதார சேவை, வணிகம் மற்றும் பிற துறைகளில் பிரித்தானிய நாட்டில் தமிழ் மக்களின் அளப்பரிய பங்களிப்பு,
- பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருவது,
- மனித உரிமைகள் மறுக்கப்படுவது
- 2009 இல் நடந்த நிகழ்வுகளை இனப்படுகொலை என்று மட்டுமே விவரிக்க முடியும்,
- தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்,
- சிறிலங்காவில் தமிழர்கள் மட்டுமின்றி தற்போது சிங்களவர்களும் அனுபவிக்கும் துன்பத்திற்கான காரணம் ஊழல், பாதுகாப்புக்கு அதிக செலவு மற்றும் சிறிலங்கா அரசின் கொடூரமான நடத்தை.
- தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்படும் சிறிலங்கா
- தமிழர்கள் ஏன் கொழும்பு அரசாங்கத்தின் மீது சந்தேகம் கொண்டுள்ளனர் என்பதை நோர்வே அனுபவத்தின் மூலம் எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
- பேச்சுவார்த்தை வெற்றி அளிப்பதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, இந்தியா பிரதிநிதித்துவத்தை கொண்ட சர்வதேச நடுவர் மன்றம் (International Arbitration) அமைக்கப்பட வேண்டும் .
- தமிழ் மக்களுக்கு மனித உரிமைகள் மற்றும் நீதியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தங்களை உறுதி செய்ய வேண்டும்.
- முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபாய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக தடைகளை நிறைவேற்றிய கனேடிய அரசாங்கத்திற்கு பாராட்டுக்கள் மற்றும் பிரித்தானியா உட்பட ஏனைய நாடுகளும் தடை விதிக்க வலியுறுத்தல்.
தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவி வரும் பிரித்தானியத் தமிழர் பேரவைக்கு குறிப்பாகவும், இங்கு வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும், சிறிலங்காவிலுள்ள தமிழ் மக்களுக்கும் ஆதரவாக நாங்கள் செய்ய விரும்பும் பணிகளில் அனைத்துக் கட்சிகளிலிருந்தும் உதவியவர்களுக்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தமிழ் பாரம்பரியத்தின் செழுமையை வெளிப்படுத்தும் வண்ணமயமான நிகழ்வில் இங்கிலாந்தின் மூன்று பிரதான கட்சிகளின் 23 பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் கவுன்சிலர்கள், பிரபுக்கள் சபையின் உறுப்பினர் ஒருவர் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வினை பிரித்தானிய தமிழர் பேரவையின் இளையோர் முன்னின்று நிகழ்த்தினார்கள்.
கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்:
1) Rt Hon Theresa Villiers, 2) Rt Hon Sir Ed Davy, 3) Rt Hon Sir Stephen Timms 4) Steve Baker, 5) Catherine West, 6) Janet Daby, 7) Louie French, 8) Sarah Olney, 9) Sarah Jones, 10) Bambos Charalambous, 11) Dawn Butler, 12) Yasmin Qureshi, 13) Ruth Margaret, 14) Ben Elliot, 15) Sarah Champion, 16) Chi Onwurah, 17) Bob Blackman, 18) Gareth Thomas, 19) Stephen Morgan, 20) Paul Bristow, 21) James Grundy, 22) Tan Dhesi, 23) Fiona Bruce மற்றும் Lord John Mann.
கலந்து கொண்ட மாநகர அவை உறுப்பினர்கள்:
1) Sarmila Varatharaj (Deputy Mayor, Wandsworth Council), 2) Chrishni Reshekaron, 3) Ellily Ponnuthurai, 4) Sharmila Sivarajah, 5) Paul White, 6) Kuha Kumaran, 7) Krishna Suresh, 8) Sasi Suresh
பல செழுமையான பங்களிப்புகளை உலகிற்கு வழங்கிய தமிழ் இனம் இலங்கை தீவில் படிப்படியாக இனவழிப்பிற்குள்ளாக்கப்பட்டு வேரோடு அழிக்கப்படுவதை உலகின் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி நீதி கிடைக்க வேண்டும் என்ற பிரித்தானிய தமிழர் பேரவையின் மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமான இந்த நிகழ்வு, இந்த வருடம் கடந்த காலங்களை விட மிக அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments are closed.