தமிழ் மக்களின் தொன்மையான வரலாறு, பாரம்பரியம், கலை, பண்பாடு, தொழிநுட்பம், அறிவியல், அரசியல் மற்றும் வாழ்க்கைநெறி என்பன உலகிற்கு செழுமை மிக்க பல விடயங்களை தந்துள்ளது. இவ்வாறான சீரார்ந்த தமிழ் மரபின் நேர்த்தியை தமிழ் மக்களுக்கும் உலகிற்கும் எடுத்துச் செல்வதற்காக கட்டங்கட்டமாக சில பணிகளை பிரித்தானிய தமிழர் பேரவை ஆரம்பித்து வைத்தது. அதன் முதற்கட்டமாக உழவர் திருநாளான தைப் பொங்கலை லண்டன் ஹரோ நகர கவுன்சிலில் (Harrow Council) 2010இல் விழாவாக முன்னெடுத்தது.
வருடக்கணக்கான முயற்சிகளின் பலனாக அடுத்த கட்டமாக 2018ஆம் ஆண்டு பிரித்தானிய பாராளுமன்றத்தில் தை பொங்கல் விழா அறிமுகப்படுத்தப்பட்டதுடன் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது ஈடுபாட்டையும் ஆதரவையும் தெரிவித்துக் கொண்டதோடு இந்த நாட்டிற்கு தமிழ் மக்களின் பல்வேறு வகைப்பட்ட பங்களிப்புகளையும் விதந்துரைக்கத் தொடங்கினர்.
இதன் அடிப்படையில் கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்வுகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட தலைப்பானது “தமிழ் இளையோர் தமது மரபுரிமை செழுமையை கொண்டாடுகின்றனர்” (The Tamil Youth cherishing their rich Heritage) என்பதாகும். 2020 ஆம் ஆண்டு “தமிழ் மரபுத் திங்கள்” (Tamil Heritage Month) என்ற கருப்பொருள் அடிப்படையில் பிரித்தானியாவில் பிரபல்யப்படுத்தப்பட்டது.
இந்த அடிப்படையில் பலரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் காரணமாக அண்மையில் லண்டன் பெருநகர அவையில் (Greater London Assembly) தமிழரின் செழுமையை கொண்டாடும் வகையில் தமிழ் மரபுத் திங்கள் (Tamil Heritage Month) என்பதாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத் தீர்மானத்தை முழுமையாக ஆதரித்து வரவேற்பதுடன் இவ்வாறான தீர்மானங்களை பிரித்தானியா முழுவதும் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை பிரித்தானியா தமிழர் பேரவையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கான ஆதரவு தளத்தில், அனைத்து தமிழ் மக்களும் தமிழ் மரபியல் மாதத்தினை பிரித்தானியா எங்கும் பிரபல்யப்படுத்துவதற்கு முன்வந்து பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்வதுடன் இந்த வருடம் ஜனவரி மாதம் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் அனைத்து கோவிட் கட்டுபாடுகளுடன் (COVID regulations) தமிழர் உழவுத் திருநாளாம் தைப்பொங்கலையும் தமிழ் மரபியல் திங்களையும் பறைசாற்றி நிகழ்வினை சிறப்புடன் மேற்கொள்வதற்கான வேலைத்திட்டங்களை பிரித்தானியா தமிழர் பேரவையினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
வாழையடி வாழையாக வந்த தமிழ் மரபினையும் செம் மொழியாம் எம் தமிழ் மொழியின் சிறப்பினையும் எம் அடுத்த சந்ததியினருக்கும் உலக மாந்தருக்கும் எடுத்துச் செல்லும் முயற்சிகளுக்கு உந்து சக்தியாக இருப்போம்.
இவை குறித்த மேலதிக விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.
பிரித்தானிய பாராளுமன்றில் தை பொங்கல் விழாவும் தமிழ் மரபுத் திங்கள் சிறப்பு நிகழ்வுகளும்

Comments are closed.