தை மாதத்தினை “தமிழர் மரபுரிமை மாதமாக” இந்த நாட்டில் அங்கீகரிக்க வேண்டும் – பிரித்தானிய தமிழர் பேரவை

தனிச் சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த மொழி, பண்பாடு, வரலாறுடன் கூடிய தமிழினத்தினை அடையாளப்படுத்தும் பல அம்சங்கள் உள்ளன. இயற்கையின் சமநிலையைக் குழப்பாத உற்பத்தி முறைகள் அதற்கு முக்கியமான நிலம், நீர், ஆதவன், விலங்குகள் போன்றவற்றை காலகாலமாக நன்றியுடன் நினைவு கூறும் பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் இன்றளவும் தொடர்கின்றன. அவை உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகை அடையாளப்படுத்தவும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கவும் வழிவகுத்துள்ளன.

தம் நிலத்தையும் பாரம்பரிய இனத்துவத்துக்கான அடையாளங்களையும் தக்க வைக்கப் போராடும் தாயகத்திலுள்ள எம் உறவுகள் துன்ப துயரங்களைக் கடந்து “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற எதிர்பார்ப்புடன் எப்போதுமே எதிர்காலம் பற்றிய தம் நம்பிக்கையைக் கை விட்டதில்லை. தாங்கவொண்ணாத பல இழப்புகளையும் சுமைகளையும் உள்ளத்தில் பெருநெருப்பாக சுமந்து கொண்டு தத்தமது நாளாந்த கடமைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். எதிர்வரும் தை பொங்கல் தாயகத்தில் மட்டுமல்ல உலகமெங்கும் பரந்து வாழும் தமிழர் மனங்களில் நம்பிக்கையையும் சமூக ஒற்றுமையையும் மேலோங்கக் செய்யட்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை வாழ்த்துகின்றது.

தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது.

தமிழர்களின் கலை, பண்பாடு, வரலாறு, அறிவியல் போன்றவற்றை நாம் வாழும் நாட்டு மக்களுக்கு கொண்டு சென்று தமிழ் இனம் ஒரு தொன்மையான பாரம்பரியமுள்ள ஒரு இனமென்பதை வெளிக் கொண்டு வரும் பல முயற்சிகள் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் நீண்ட காலத் தயாரிப்புகளின் அடிப்படையில் பல வருடங்களிற்கு முன்னர் பிரித்தானிய தமிழர் பேரவை தை பொங்கல் தினத்தை இந்த நாட்டில் முக்கியத்துவப்படுத்த முயற்சிகள் எடுத்தது. தமிழ் மக்களும் அமைப்புகளும் சேர்ந்து பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக வருடா வருடம் சிறப்பான முறையில் தை திருநாள் விழாக்களை நடத்துவது பாராட்டத் தக்கது.

கடந்த வருடங்களில் “தை பொங்கல்” தினத்தை பிரித்தானிய பாராளுமன்றில் நடத்தியதைப் போன்று இம் முறையும் தை மாதத்தினை “மரபுரிமை மாதமாக” பிரித்தானியாவில் நடைமுறையில் கொண்டுவரும் முயற்சியாக 2020 தைப் பொங்கல் நிகழ்வுகளை பிரித்தானிய தமிழர் பேரவை எதிர்வரும் 14 ஜனவரி அன்று பாராளுமன்றில் நடத்திட ஏற்பாடுகளை மேற் கொண்டுள்ளனர். எதிர்வரும் காலங்களில் தை மாதத்தினை “தமிழர் மரபுரிமை மாதமாக” இந்த நாட்டில் அங்கீகரிக்க வைப்பதற்கு அனைத்து மக்களினதும் ஏகோபித்த ஆதரவும் பங்களிப்பும் தேவைப்படுகின்றது. பிரித்தானியாவின் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இக் கோரிக்கையை முன்வைத்து செயல்படும் பிரித்தானிய தமிழர் பேரவை இம் முயற்சிக்கு ஆக்கபூர்வமாக செயல்பட விரும்புவோரை தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றது.

பிரித்தானிய தமிழர் பேரவை

(BTF)

Press Release 120120

Please follow and like us:
error

Comments are closed.