1983ம் ஆண்டு நடந்தேறிய கறுப்பு யூலை தமிழர் படுகொலை மீதான குழுநிலை கலந்துரையாடல் பிரித்தானிய தமிழர் பேரவையினால் (BTF) வருடாவருடம் பிரித்தானியப் பாராளுமன்றில் நடாத்தி வருவது தெரிந்ததே. இவ் வருடம், கொரோனா-19 தீவிர நோய்ப் பரவலால் பிரித்தானியப் பாராளுமன்றின் மீது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பாராளுமன்றில் அல்லாமல், Zoom இணையவழியூடாக குழுநிலை கலந்துரையாடலாக எதிர்வரும் யூலை 23ம் திகதி பிற்பகல் 6:00 மணியிலிருந்து 7.30 மணிவரை நடைபெறவுள்ளது.
“அவர்கள் எதிர் நாங்கள்”
இவ் வருடம் விவாதக் கருப்பொருளாக “அவர்கள் எதிர் நாங்கள்” (Them Vs Us) என்ற தலைப்பு அமையும். சிங்கள பௌத்தரல்லாத சமூகங்களின் இருப்புக்கு உலை வைக்கும் விதத்தில் ஓரின, ஒரு மொழி, ஒரு மத சிறிலங்கா என்று நன்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நிகழ்ச்சிநிரலை சிங்கள தேசம் பல தசாப்தங்களாக தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. “அவர்கள்” வேறு “நாம்” வேறு என்று அடையாளப்படுத்தலில் ஆரம்பிக்கும் நிகழ்ச்சித் திட்டம் படிப்படியாக மேலும் அடுத்த கட்டங்களில் தீவிரமான விழைவுகளை நோக்கி நகர்த்தப்பட்டு வருவதனை இனவழிப்பு இடம்பெற்ற ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு காட்ட முடியும்.
சிறிலங்கா வாழ் தமிழர்கள் அனுபவித்து வரும் துன்பியல் வரலாற்றில் யூலை 1983 தழிழர் படுகொலை என்பது தொடர் வன்முறைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதோடு, படுகொலையைத் தூண்டி விட்ட அரசியல் உள்நோக்கத்தையும் (intent) தோலுரித்துக் காட்டுவதில் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த ஒரு முறைசார் செயல்திட்டத்தை பிரதிபலிக்கும் வகையிலும், பல படுகொலைகளுக்கு முகம் கொடுத்து உயிர் தப்பி உலகில் பரந்து வாழும் தமிழர்களை இது குறித்த செய்திகள் சென்றடைவதற்கும், அவர்கள் தங்கள் அனுபவங்களை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், மேற்படி கலந்துரையாடல் “அவர்கள் எதிர் நாங்கள்” என்ற கருப்பொருளை தலைப்பாக தெரிவு செய்துள்ளோம். சிறிலங்காவில் அரசியல் பௌத்த (political Buddhism) நிகழ்ச்சி நிரலினால் தூண்டப்பட்டே இன முரண்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றது என்பதனை வெளிபடுத்த இக் கருப்பொருள் துணை புரியும்.
கறுப்பு யூலை 1983 படுகொலையில் உயிர் தப்பியவர்களிடமிருந்து சான்றுகளை பதிவு செய்தல்
எதிர்காலத்தில் இடம்பெற வாய்ப்புள்ள நீதி விசாரணை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இனப்படுகொலையின் பல்வேறு பரிமாணங்களையும் ஆவணப்படுத்த முயன்று வருகின்றோம். இனப்படுகொலையை நோக்காகக் கொண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதை நிரூபிப்பதற்கு நம்பகத் தன்மை கொண்ட சான்றுகளை ஆவணப்படுத்துதல் பிரதானமாகிறது. சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலையில் உயிர் தப்பி உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடமிருந்து பெறப்பட்ட செய்திகள் அடங்கிய ஒளிப்பதிவுத் தொகுப்பொன்று இக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் பி. ப. 6.00 – 6.30க்கு காண்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து 6:30 மணியிலிருந்து 7.30 மணிவரை பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் குழுநிலை கலந்துரையாடல் இடம் பெறும்.
Comments are closed.